நோன்புக்_கஞ்சியும் !! மோதினாரும் !! (சிறுகதை)
நோன்புக்_கஞ்சியும் !!
மோதினாரும் !!
(சிறுகதை)
அந்தப் பள்ளிவாசலில் நோன்பு காலத்தில் அசர் தொழுகை முடிந்தவுடன் மோதினாருக்கு முக்கிய வேலை ஒன்றை அந்த ஜமாத் நிர்வாகம் ஒதுக்கியிருந்தது..
அதாவது ஏழைகள் / பெண்கள் போன்றோர் வீட்டில் நோன்பு திறக்க பார்சல் நோன்பு கஞ்சி வாங்க ஒரு கூட்டம் வந்து வரிசையில் நிற்பார்கள்...
அப்படி வரிசையில் நிற்பவர்களுக்கு அவர்கள் கொண்டு வரும் பாத்திரங்களில் கஞ்சி ஊத்திக் கொடுப்பது தான் அந்த வேலை ...
கஞ்சி ஊத்தும் போது தலைவர் மோதினாருக்கு கொடுத்த கட்டளைப் படி ஒவ்வொருவருக்கும் 2 அல்லது 3 கரண்டி கஞ்சி ஊத்திக் கொண்டிருந்தார் மோதினார் ...
அப்போது ஒரு பள்ளிவாசலில் அசர் தொழுதுவிட்டு கஞ்சி வாங்கிய காஜா பாய்... மோதினாரிடம் இன்னும் கொஞ்சம் ஊத்துங்க , வீட்டுக்கு வெளியூர்ல இருந்த ஆள் வந்திருக்காங்க என்று சொல்லவும் ,
மோதினார் சற்றும் தாமதிக்காமல் நோன்பு திறக்க வர்ரவங்களுக்கு கஞ்சி வேணும் பாய் , தட்டுப்பாடு ஆயிட்டுனா தலைவர் என்னைய தான் திட்டுவார், நீங்க வேனும்னா தலைவர் கிட்ட ஒரு வார்த்தை கேளுங்க அவர் சொன்னா கூட கொஞ்சம் கஞ்சி ஊத்துறேன் என்று சொல்லிக் கொண்டே கஞ்சியை ஊத்திக் கொண்டிருந்தார்...
திடீரென்று ஏதோ சிந்தனையில் மோதினார் கையில் இருந்த கரண்டியை கஞ்சி சட்டியில் போட்டு விட்டார்...
சட்டி நிறைய கஞ்சி இருந்ததால் மோதினாரின் முகத்தில் கஞ்சி கஞ்சி தெரித்து விட்டது...
சூடு தாங்காமல் முகத்தை கழுவப் போனார் மோதினார் ...
அங்கு தண்ணீர் குழாய் பக்கத்தில் செயலாளர், பொருளாளரிடம் பேசிக் கொண்டிருந்த தலைவர்,
மோதினாரே கஞ்சி சட்டியில் கரண்டிய போடுற அளவுக்கு உமக்கு என்னய்யா சிந்தனை என்றார்...
உடனே மோதினார் தலைவரைப் பார்த்து , தலைவரே நான் ஒவ்வொருத்தருக்கா கஞ்சி ஊத்திக் கொண்டிருந்தேன்.
அப்போ நீங்க சொன்ன மாதிரி அளவுல தான் கஞ்சி ஊத்தினேன்.
ஒரு சிலர் கொஞ்சம் கூட ஊத்துங்க என்று சொன்னார்கள். ஆனால் நான் அதையெல்லாம் காதுல வாங்காம நீங்க சொன்ன அளவுக்கு தான் கஞ்சிய ஊத்திட்டு இருந்தேன்...
திடீருன்னு !!
(பிளாஸ் பேக்)
வரிசையில் நின்ன ஒரு வயசானவர் இன்னொருத்தருக்கிட்ட சொல்றாரு !
பள்ளிவாசலில் ஒரு நாள் கஞ்சி செலவு 1000 ரூ . கஞ்சிக்காக உதவி செய்யுங்க , நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க கஞ்சிக்கு உதவி செய்யுங்கன்னு ஒவ்வொரு தொழுகையிலும் அறிவிப்பு செய்து பணம் வசூல் பண்றாங்க...
ஆனா நோன்பாளிக்கு கஞ்சி வாங்க வரிசையில நிக்கும் போது 2 கரண்டி தான் ஊத்துவோம்னு ரூல்ஸ் பேசுறாங்க...
இன்னைக்கு ஜும்ஆ வில் கூட இமாம் பயான் செய்யும் போது சகாபாக்கள் கால வரலாற்றிலும் , இறுதித் தூதரின் வரலாற்றிலும் தர்மம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்தத பத்தி பேசி உருக வச்சாரு...
ஆனா அடுத்த தொழுகை அசர் தான் முடிஞ்சிருக்கு ...
நோன்புக் கஞ்சிய கூட தாராளமா கொடுக்க மாட்டுக்காங்க...இவங்க தர்மம் கொடுப்பதை பத்தி பேசி என்னத்துக்கு என்றார்...அவர் பேசுனது என் மனச குத்துச்சு...அந்த சிந்தனையில் தான் கரண்டிய கஞ்சி சட்டிக்குள் மோதினார் போட்டுவிட்டார்...
(பிளாஸ்பேக் முடிந்தது)
இதன் தலைவரே நடந்தது என்று சொன்ன படியே மோதினார் முகத்தில் தெரித்திருந்த கஞ்சியை தண்ணீர் ஊற்றி கழுவினார்...
மோதினார் முகத்தில் தெரிந்த கஞ்சியை கழுவும் போதே தலைவரும் தனது முகத்தை கர்சிப்பால் துடைத்தார்...
ஒரு வேளை அந்த வரிசையில் நின்றவர் சொல்லியது தலைவரின் முகத்தில் வேறு ஏதாவது தெரித்தை போன்ற உணர்வு ஏற்பட்டிருக்குமோ..??
அல்பி நிஜாம்
19-05-19
.
Comments
Post a Comment